வேதாரண்யம்: நாகை மாவட்டம்,வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பேரூராட்சி பகுதிக்குள்பட்ட பொது மக்கள் கரோனா தடுப்புக்கான இரண்டாவது மெகா தடுப்பூசி முகாமுக்கு இன்று (செப்.19) வீடு வீடாக சென்று வெற்றிலைப் பாக்கு பழம் வைத்து அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
தலைஞாயிறு பேரூராட்சியில் எண்பது சதவிகித பொதுமக்கள் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
இருபது சதவிகிதம் பேர் தடுப்பூசி முகாம்களுக்கு வருகை தரவில்லை.
நூறு சதவிகிதம் இலக்கை எட்ட வாகனம் மூலம் நடமாடும் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப் பட்டு வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப் பட்டது.
இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிலர் தயக்கம் காட்டிய நிலையில் அவர்களின் வீடுகளில் நடமாடும் தடுப்பூசி முகாம் வாகனத்தை நிறுத்தி வெற்றிலைப் பாக்கு வைத்து தடுப்பூசி போட்டுக் கொள்ள தலைஞாயிறு பேரூராட்சி தன்னார்வலர்கள் அழைப்பு விடுத்தனர்.
அழைப்பை மறுக்க முடியாத பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
இது குறித்து செயல் அலுவலர் கு.குகன் தெரிவித்தது :
தலைஞாயிறு பேரூராட்சியில் 100% தடுப்பூசி இலக்கு எட்ட நடமாடும் தடுப்பூசி முகாம், சமூக வலை தளங்களில் பிரசாரம், ஆடல் பாடல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது வெற்றிலை பாக்கு பழம் வைத்து அழைத்து வருகிறோம் என்றார்.