புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான தேதி இன்று மதியம் அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்து வார்டுகளுக்கான இட ஒதுக்கீடு, வாக்காளர் பட்டியல் வெளியீடு ஆகிய பணிகளை முடித்து, தேர்தலை நடத்த தயாராகி உள்ளது.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக, மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது 1,149 பதவிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் உள்ளது.
இது தொடர்பான ஒரு வழக்கில், உச்ச நீதிமன்றம் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்டு உள்ளதால், புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகளை செய்து வருகிறது.