முகப்பு
தமிழ்நாடு

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் சசிகலா!

கரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சசிகலா இன்று(ஜன.31) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
கோப்புப்படம்
பகிர்:

கரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சசிகலா இன்று(ஜன.31) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறையில் சசிகலா அடைக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா, கடந்த ஜனவரி 21-ஆம் தேதி முதல் பெங்களூரு கே.ஆா்.சந்தைப் பகுதியில் அமைந்துள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே தண்டனைக் காலம் முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

தொடர்ந்து அதே மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு தற்போது கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில் அவர் இன்று  காலை 11.45 மணியளவில் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 நாள்கள் அவர் மருத்துவனையில் சிகிச்சை பெற்றுள்ளார். 

கடந்த மூன்று நாள்களாக அவரது உடல்நிலை சீராக உள்ளது. செயற்கை சுவாசக்கருவி இன்றி அவர் சுவாசித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் சில நாள்கள் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் சில நாள்கள் பெங்களூருவில் தங்கி ஓய்வு பெற்று வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி தமிழகம் வருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

டிடிவி தினகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்குச் சென்றனர். மருத்துவமனைக்கு வெளியே சசிகலாவை வரவேற்க அவரது ஆதரவாளா்களும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரும் கூடியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →