சிறுவனை நேரில் அழைத்துப் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்!
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் எஸ்.எஸ்.மாதவ் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தான் புதிதாக உருவாக்கிய கையடக்க கணினி மையச் செயலாக்க கருவியை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
திருவாரூர் மாவட்டம் பழவனக்குடி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் எஸ்.எஸ்.மாதவ் இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தான் புதிதாக உருவாக்கிய கையடக்க கணினி மையச் செயலாக்க கருவியை(CPU) காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று (28.7.2021) தலைமைச் செயலகத்தில், திருவாரூர் மாவட்டம், பழவனக்குடி கிராமத்தைச் சேர்ந்த செல்வன் எஸ்.எஸ். மாதவ் சந்தித்து, தான் புதிதாக உருவாக்கிய கையடக்க கணினி மையச் செயலாக்கக் கருவியைக் (CPU) காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
திருவாரூர் மாவட்டம், பழவனக்குடி கிராமம், கலைஞர் நகரில் வசித்து வரும் சேதுராசன் என்பவரின் மகன் செல்வன் எஸ்.எஸ். மாதவ், ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் கணினியில் மிகுந்த ஆர்வம் கொண்டு, கணினி மொழிகளான ஜாவா, பைதான், சி, சி++, கோட்டலின் (Java, Python, C, C++, Kotlin) ஆகிய கணினி மொழிகளைப் படித்துள்ளார்.
இவர் கரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் கையடக்க சிறிய சிபியு( Mini CPU) கண்டுபிடித்து உள்ளதாகவும், இதற்காக இரண்டு ஆண்டுகளாகக் கடுமையாக முயற்சித்து வெற்றி பெற்றுள்ளார் என்பதைக் கேள்விப்பட்ட முதல்வர், எஸ்.எஸ். மாதவ்-யை நேரில் அழைத்துப் பாராட்டினார். இக்கருவி அனைவரிடத்திலும் சென்றடைய ஏதுவாக Terabyte India CPU Manufacturing Company என்ற நிறுவனத்தினைத் தொடங்கி, இணையதளம் (Online) மூலமாக மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார் என்ற தகவலைக் கேட்டறிந்த முதல்வர் அம்மாணவனை வாழ்த்தினார். எஸ்.எஸ். மாதவ்-இன் கண்டுபிடிப்பினைப் பாராட்டிய முதல்வர், கணினி தொடர்பான அவரது உயர்படிப்பிற்கும், ஆராய்ச்சிக்கும் தமிழக அரசு அனைத்துவிதமான உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார். இந்நிகழ்வின்போது, எஸ்.எஸ். மாதவ்-இன் பெற்றோர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிக்க: வாழத் தகுதியற்றதா சென்னை? தரம் குறையும் காற்று!