மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வீடுகளுக்கே சென்று கல்வி வழங்கப்படும் உள்ளிட்ட பள்ளிக்கல்வி சார்ந்த முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் கல்வித்துறை சார்ந்த மானியம் குறித்து இன்று காலைமுதல் விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில், பள்ளிக்கல்வி சார்ந்த அறிவிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
- ரூ. 150 கோடி மதிப்பீட்டில் 7,500 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.
- 2,713 நடுநிலை பள்ளிகளில் உயர்தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ரூ. 210 கோடியில் அமைக்கப்படும்.
- பள்ளி வளாகங்கள் தூய்மை செய்யும் பணி, இரவுநேர காவலர்கள் பணி போன்ற பள்ளி பராமரிப்புக்கு ரூ. 100 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.
- 6,029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ. 30 கோடி மதிப்பில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
- 1,000 மாணவர்களுக்கு மேல் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ. 90 கோடி மதிப்பீட்டில் முழுமையாக கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படும்.
- கல்வி, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட இணைக்கல்வி வசதியுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த பள்ளி சென்னையில் ரூ. 7 கோடி மதிப்பில் கட்டப்படும்.
- பல்துறை அறிஞர்கள் படித்த பள்ளிகளும், 100 ஆண்டுகளுக்கு மேல் உள்ள பள்ளிகளும் அதன் தனிச் சிறப்பு மாறாமல் இருக்க ரூ. 25 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்.
- அரசின் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும் 100 பள்ளிகளின் சிறந்த தலைமையாசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமை விருது வழங்குவதுடன் பள்ளிக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும்.
- 1,000 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ. 3 கோடி மதிப்பீட்டில் தொல்லியல் துறை பயிற்சி அளிக்கப்படும்.
- ரூ. 25 கோடி செலவில் நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள் திட்டம் செயல்படுத்தப்படும்.
- மாணவர்களின் கலைத் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக ரூ. 5 கோடி மதிப்பில் கலைத் திருவிழா நடத்தப்படும்.
- மாநில அளவில் ‘ஹேக்கத்தான்’ போட்டிகள் நடத்தப்படும்.
- அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செயல்திறனை ஊக்கப்படுத்தும் விதமாக ரூ. 25 லட்சம் செலவில் பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைக்கப்படும்.
- தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழ், உயர்கல்வி மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழ் மாதம் இருமுறை வெளியிடப்படும். ஆசிரியருக்காக கனவு ஆசிரியர் இதழ் வழங்கப்படும்.
- பள்ளிக்கு வர இயலாத 10,146 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இருப்பிடத்திற்கே சென்று கல்வி வழங்க ரூ. 8.11 கோடி ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.