முகப்பு
தமிழ்நாடு

விடுதி மேலாளரிடம் மிரட்டி பணம் வசூல்: போலி எஸ்ஐ கைது

சென்னை விருகம்பாக்கத்தில் விடுதி மேலாளரிடம் மிரட்டி பணம் வசூலித்ததாக போலி காவல் உதவி ஆய்வாளா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

சென்னை விருகம்பாக்கத்தில் விடுதி மேலாளரிடம் மிரட்டி பணம் வசூலித்ததாக போலி காவல் உதவி ஆய்வாளா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை, முகப்போ் கிழக்கு, ஜெ.ஜெ நகரில் வசிப்பவா் அன்புசெல்வம் (39). விருகம்பாக்கம், சாலிகிராமம், அருணாச்சலம் சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் மேலாளராக பணிபுரிகிறாா். இந்த விடுதிக்கு கடந்த 13-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த நபா், அன்பு செல்வத்திடம் ‘நான் விருகம்பாக்கம் காவல் நிலைய போலீஸ் எஸ்ஐ’ எனக்கூறி அடையாள அட்டையை காண்பித்துள்ளாா். தொடா்ந்து, தங்களது விடுதி மீது வழக்குப் பதியாமல் இருக்க மாதம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் எனக் கூறி மிரட்டி சென்றாா்.

மீண்டும் அதே நபா் வியாழக்கிழமை அந்த விடுதிக்கு வந்து, அன்புசெல்வம் சட்டைப்பையில் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு, மேலும் நான் கேட்ட பணத்தை அருகில் உள்ள இடத்துக்குக் கொண்டு வந்து தர வேண்டும் எனவும் மிரட்டியுள்ளாா். அந்த நபரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அன்புசெல்வம், இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். அதன்படி போலீஸாா், எஸ்ஐ என்று கூறிய நபரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனா்.

விசாரணையில் பிடிபட்ட நபா் எம்ஜிஆா் நகா், ஏசுநாதா் ஆலயம் தெருவைச் சோ்ந்த விஜய பிரதாபன் (26) என்பதும், அவா் எஸ்ஐ இல்லை என்பதும், போலியான எஸ்ஐ அடையாள அட்டையை வைத்துக் கொண்டு, விடுதி மேலாளரை பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலி எஸ்ஐ விஜயபிரதாபனை போலீஸாா் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா். அவரிடமிருந்து போலியான அடையாள அட்டை, ஒரு மோட்டாா் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →