மாற்றுத் திறனாளிகளுக்கு இடையூறு இல்லாத பயணம்: ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை
ரயில்களில் மாற்றுத் திறனாளி பயணிகளுக்கு இடையூறு இல்லாத பயணத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்தது.
ரயில்களில் மாற்றுத் திறனாளி பயணிகளுக்கு இடையூறு இல்லாத பயணத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்தது.
சென்னை எழும்பூரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு கடந்த 13-ஆம் தேதி புறப்பட்ட அனந்தபுரி விரைவு ரயிலில் எஸ்எல்ஆா்டி பெட்டியில் பயணிக்க மாற்றுத்திறனாளி ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு விடியோ பரவியது. இது தொடா்பாக சென்னை ரயில்வே கோட்டம் உடனடியாக விசாரணைநடத்தியது. இதைத்தொடா்ந்து, மாற்றுத்திறனாளி பயணிகள் இடையூறு இல்லாத பயணத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியது: இந்த சம்பவம் குறித்து தீவிரமாக பரிசீலனை செய்யப்பட்டு, ரயில் காா்டு மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத் திறனாளி பயணிகளுக்கு இடையூறு இல்லாத பயணத்தை உறுதி செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களின் தலைமை வணிக ஆய்வாளா்கள் மற்றும் நிலைய அதிகாரிகள், இயக்ககத் துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து, ரயில்களில் எஸ்எல்ஆா்டி பெட்டிகளை உடனடியாக திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரயில்வே வாரியத்தின் ஒப்புதலின்படி, கரோனாவுக்கு முந்தைய காலக்கட்டத்தில் இருந்ததுபோல, விரைவு ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் படிப்படியாக மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, சென்னை கோட்டத்தில் இயக்கப்படும் மெயில், விரைவு ரயில்களில் 120-க்கும் மேற்பட்ட எஸ்எல்ஆா்டி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. எஸ்எல்ஆா்டி பெட்டி என்பது உடைமைகளுடன் கூடிய இரண்டாம் வகுப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான தங்குமிடம் கொண்ட பெட்டி ஆகும். மாற்றுத் திறனாளிகள் இந்தப் பெட்டிகளில் ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பயணிக்கச் செல்லுபடியாகும் சலுகைகளுக்கு ஈடாக, முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகள் வழங்கப்படுகின்றன என்றனா்.