முகப்பு
தமிழ்நாடு

வாகன விபத்தில் இளைஞருக்கு மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர்கள் தானமாக வழங்கினர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:00 AM
பகிர்:


கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர்கள் தானமாக வழங்கினர்.

கோவை மாவட்டம், வால்பாறை முடீஸ் பகுதியைச் சேர்ந்த மலையப்பன் மகன் ம.ஹரிகரன் (23). வால்பாறையில் உள்ள நகைக்கடையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி இஞ்சிப்பாறை மைதானத்தில் நண்பர்களுடன் கால்பந்து விளையாடி விட்டு மாலை 6 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். போட் ஹவுஸ் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்தார். 

அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து மற்றும் அறுவை  சிகிச்சைப்  பிரிவில்  அனுமதிக்கப்பட்ட  இளைஞருக்கு மூளை அறுவை சிகிச்சை மருத்துவர், இருதயப் பிரிவு மருத்துவர், தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். ஆனால், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ஏப்ரல் 18 ஆம் தேதி அதிகாலை மூளைச்சாவு ஏற்பட்டது. இது தொடர்பாக இளைஞரின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் உடல் உறுப்புகள் தானம் குறித்தும் மருத்துவர்கள் எடுத்துரைத்தனர்.

இதனைத் தொடர்ந்து இளைஞரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க இளைஞரின் பெற்றோர்கள் ஒப்புக்கொண்டனர். அரசு மருத்துவமனை முதல்வர் அ.நிர்மலா உடல் உறுப்பு தானத்திற்கு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். இளைஞரின் 2 சிறுநீரகங்கள், கல்லீரல், 2 கண்கள் ஆகியவை தானமாக பெறப்பட்டது.

இளைஞரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருபவருக்கும், மற்றொன்று சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருபவருக்கும் வழங்கப்பட்டது. இருதயம் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவருக்கும், கண்கள் இரண்டும் அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் வழங்கப்பட்டது. 

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், அரசு மருத்துவமனை முதல்வர் அ.நிர்மலா.

இதனைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இளைஞரின் உடலுக்கு ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அஞ்சலி செலுத்தினார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் முதல்வர் அ.நிர்மலா, மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.