தமிழகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை எனவும் இனிவரும் காலங்களில் மின்வெட்டு இருக்காது எனவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேரவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் கோடை காலத்தில் மின்சார தேவை குறித்து அதிமுகவை சேர்ந்த முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்கு விளக்கம் அளித்து மின்சாரத்துறை அமைச்சர் பேசியதாவது:
கோடை காலத்தில் தேவைப்படும் மின் தேவையை கருத்தில் கொண்டு அனல்மின் நிலையங்களில் பற்றாக்குறையை போக்க 4.80 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய டெண்டர் விடப்பட்டதை தொடர்ந்து, ஓரிரு நாள்களில் அந்த நிலக்கரி வந்துவிடும்.
தமிழகத்தில் இந்த கோடை காலத்தில் மின் பற்றாக்குறை 2,500 மெகாவாட்டாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆகையால், தேவையை பூர்த்தி செய்ய 3,000 மெகாவாட் பெற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது மின்விநியோகம் சீராக உள்ளது. மின்வெட்டு தற்போது இல்லை. இனி வரும் காலங்களிலும் மின்வெட்டு இருக்காது எனத் தெரிவித்தார்.