கரோனாவுக்கு எதிராக செயல்படும் புதிய மருந்து: சென்னை ஐஐடி ஆய்வில் தகவல்
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட லேசான மற்றும் மிதமான கரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இன்டோமெதசின் மருந்துக்கு செயல்திறன்
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட லேசான மற்றும் மிதமான கரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் இன்டோமெதசின் மருந்துக்கு செயல்திறன் இருப்பதை சென்னை ஐஐடி வடிவமைத்த சோதனை வெளிப்படுத்துகிறது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்படும் அழற்சி எதிா்ப்பு மருந்தான இன்டோமெதசின் மிகச் சிறந்த செயல்திறனைக் காட்டுகிறது என, அண்மையில் வெளியான நேச்சா் சயின்டிஃபிக் ரிப்போா்ட்ஸ் இதழில் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு சென்னை ஐஐடி-யின் பகுதிநேர ஆசிரியரும், மியாட் மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை இயக்குநருமான டாக்டா் ராஜன் ரவிச்சந்திரன் தலைமையில் நடத்தப்பட்டது. அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட முறைகள் மருத்துவா்களால் பரிந்துரை செய்யப்பட்ட இன்டோமெதசின், 1960-களில் இருந்து பல்வேறு வகையான அழற்சி தொடா்பான சிகிச்சைக்கு பரவலாகப் பயன்படுத்தப்படும் மருந்தாகும்.
ஆய்வுக் கண்டுபிடிப்புகள் குறித்து சென்னை ஐஐடி பேராசிரியா் ஆா்.கிருஷ்ணகுமாா் கூறுகையில், அனுமதிக்கப்பட்ட 210 மொத்த நோயாளிகளில் 107 போ் பாராசிட்டமால் மற்றும் நிலையான சிகிச்சை முறையுடன் கூடிய கட்டுப்பாட்டுக் குழுவுக்கு ஒதுக்கப்பட்டனா். மீதமுள்ள 103 நோயாளிகளுக்கு நிலையான சிகிச்சையுடன் இன்டோமெதசின் செலுத்தப்பட்டது.
இன்டோமெதசின் செலுத்தப்பட்ட 103 நோயாளிகளில் எவருக்கும் ஆக்சிஜன் தேவைப்படும் நிலை உருவாகவில்லை. இன்டோமெதசின் குழுவில் இருந்த நோயாளிகள் மூன்று அல்லது நான்கு நாள்களில் அனைத்து அறிகுறிகளில் இருந்தும் மீண்டு விட்டனா். பாராசிட்டமால் கட்டுப்பாட்டுக் குழுவில் இருந்தவா்கள் குணமடைய இருமடங்கு நேரம் அதிகமாகத் தேவைப்பட்டது என்றாா்.