வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேலம் - சென்னை புறவழிச்சாலையில் வியாழக்கிழமை காலை, கார் மீது தனியார் மகளிர் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில், சென்னை கணினி பொறியாளர் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மனைவி படுகாயம் அடைந்தார். இந்த விபத்தால் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை தி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (50). இவர் தனியார் நிறுவனத்தில் சென்னை கணினி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரும், இவரது மனைவி சுபஸ்ரீ இருவரும், கோயம்புத்தூருக்கு சென்று விட்டு, இன்று வியாழக்கிழமை காலை சென்னை நோக்கி, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர்.
வாழப்பாடி புறவழிச்சாலையில் புதுப்பாளையம் ஆத்துமேடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற சேலம் அம்மாபேட்டை தனியார் மகளிர் கல்லூரி பேருந்து, இந்த கார் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கணினி பொறியாளர் ராஜேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த இவரது மனைவி சுபஸ்ரீயை மீட்ட போலீஸார் மற்றும் பொதுமக்கள், சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேம்பாலத்தில் சாலை விபத்து ஏற்பட்டதால், ஒரு மணி நேரத்திற்கு மேலாக சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமாசங்கர் தலைமையிலான போலீஸார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.