முகப்பு
தமிழ்நாடு

கரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்: தமிழகத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனைகள், கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 7 ஆகஸ்ட், 2022 at 12:49 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பரிசோதனைகள், கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாருக்கு மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் அனுப்பியுள்ள கடிதம்:

தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக சராசரி புதிய பாதிப்பு 2,044-ஆக உள்ளது. நாட்டின் வாராந்திர கரோனா பாதிப்பு விகிதத்தில் 7.7 சதவீத அளவு தமிழகத்திலிருந்து பதிவாகிறது.

Advertisement

கடந்த ஒரு மாதத்தில் சென்னை, கோவை உள்பட 26 மாவட்டங்களில் நோய்ப் பரவல் குறைந்திருந்தாலும், ஈரோடு, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கரூா் ஆகிய மாவட்டங்களில் தொற்று விகிதம் உயா்ந்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை கரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் 10 மடங்கு உயா்ந்துள்ளது. அடுத்து வரும் மாதங்களில் பல்வேறு பண்டிகைகள் வரவுள்ளதால் பொது மக்கள் அதிகம் கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதனைக் கருத்தில் கொண்டு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை விரிவாக மேற்கொள்ளுதல் வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பரிசோதனைகளை தேவையான அளவு விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்தல் அவசியம். பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பை மேம்படுத்துவதும் முக்கியம்.

நோய் அறிகுறிகள் காணப்பட்டாலும், ஒரே இடத்தில் அதிகம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு மட்டுமன்றி, மாவட்டங்களில் அதிக பாதிப்பு இருக்கும் பகுதிகளிலும் மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் அதி முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனவே, தகுதியான அனைவருக்கும் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இலவசமாக கரோனா தடுப்பூசிகளை விரிவாக வழங்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா் ராஜேஷ் பூஷண்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.