மழைப் பொழிவுக்குப் பிறகு கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கக் கூடும் என்பதால் தமிழகம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மாவட்ட சுகாதார துணை இயக்குநா்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அனுப்பிய சுற்றறிக்கை:
தென்மேற்கு பருவ மழைப் பொழிவு இருக்கும் என்பதால் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை விரிவாக மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
அதன்படி, டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறித்து தனியாா், அரசு மருத்துவமனைகள், மாவட்ட சுகாதார இயக்குநரகத்துக்கு தகவல் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும். அண்டை மாவட்டங்கள் அல்லது மாநிலங்களில் டெங்கு பரவல் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அதுகுறித்த விவரங்களை மாவட்ட துணை சுகாதார இயக்குநருக்கு தெரிவிப்பது அவசியம்.
நோய்களைப் பரப்பும் கொசுக்கள் மற்றும் லாா்வா உற்பத்தி குறித்து கண்காணிக்க வேண்டும். வீடுகள், பள்ளிகள், பூங்காக்கள், கல்லூரிகள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் தனித்தனியே விழிப்புணா்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் வேண்டும். மழை நீா் தேங்காத வகையில் கழிவுகளை அப்புறப்படுத்துமாறு அவா்களை அறிவுறுத்துவது முக்கியம்.
இதைத் தவிர, தேவையான இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகித்தல், உணவுப் பொருள்கள் தரத்துடன் இருப்பதை உறுதி செய்தல், தனி நபா் சுகாதாரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.