சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோயிலில் நடைபெற்று வரும் ஆடி பிரமோற்சவ விழாவில் முக்கிய வைபவமாக திருக்கல்யாண உற்சவம் கடந்த திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்கு உட்பட்ட ஸ்ரீ வீர அழகர் கோயிலில் ஆடி பிரமோற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு செளந்தரவல்லித் தாயார் சன்னதியில் வீர அழகர் எனும் நாமத்துடன் அழைக்கப்படும் ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளினார். அதன் பின்னர் திருக்கல்யாணத்திற்கான சம்பிரதாய பூஜைகள் தொடங்கி நடைபெற்றது.
சுந்தரராஜப் பெருமாளுக்கும் சௌந்தரவல்லி தயாருக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி முடிந்ததும் சுந்தரராஜப் பெருமாள் கையில் திருமாங்கல்ய நாண்கள் வைத்து எடுக்கப்பட்டு அதன்பின் மூலவர் சௌந்தரவல்லித் தயாருக்கும் உற்சவருக்கும் தனித்தனியாக திருமாங்கல்ய நாண்கள் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
கோயிலுக்குள் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாணத்தைக் கண்டு தரிசித்தனர். அதைத்தொடர்ந்து சுந்தர்ராஜப் பெருமாளுக்கும் சௌந்தரவல்லி தயாருக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. பெண்களுக்கு திருமாங்கல்ய கயிறு,குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.