கருணை அடிப்படையிலான பணியை உரிமையாக கோர முடியாது என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
அரசுப் பணியில் இருந்த தந்தை உயிரிழந்ததை தொடர்ந்து கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரி அவரது மகள் உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கருணை அடிப்படையிலான பணியை, தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும் எனக் கோருவது அத்திட்டத்திற்கு எதிரானது என்றும் அதனை உரிமையாக கோர முடியாது என்றும் தெரிவித்தார்.
மேலும், கருணை அடிப்படையிலான பணி என்பது உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு உடனடி பொருளாதார தீர்வுக்குதான். இதை நீண்ட காலம் காத்திருப்பில் வைக்க இயலாது. கருணை அடிப்படையில் பணி கோருபவர், பணியில் இருந்தவர் உயிரிழந்த 3 ஆண்டுக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்த வழக்கில், பணியில் இருந்தவர் உயிரிழந்த 3 ஆண்டுக்கு பதிலாக, வயதுவரம்பு பூர்த்தி ஆனதிலிருந்து மூன்று ஆண்டுக்குள் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.