பொது கிணற்றை மீட்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி 2 வாலிபர்கள் போராட்டம்!
பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த பொதுக்கிணற்றை மீட்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி 2 வாலிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம்: பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த பொதுக்கிணற்றை மீட்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி 2 வாலிபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிபட்டி கிராமம் ஆயா மரத்தூர் பகுதியை சேர்ந்த ரவிக்குமார், முத்து இருவரும் அதே பகுதியில் உள்ள செல்போன் கோபுரம் பகுதிக்கு வந்தனர். அங்கு அவர்கள் செல்போன் கோபுரம் மீது ஏறி நின்று கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறினார்கள்.
இதையும் படிக்க | தூத்துக்குடி அருகே ரூ. 20 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தாரமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு காவல் ஆய்வாளர் தொல்காப்பியன் தலைமையில் காவல்துறையினர் மற்றும் ஓமலூர் தீயணைப்புப் படையினரும் அங்கு வந்தனர். நீண்ட நேரப் பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர்கள் இருவரும் கீழே இறங்கி வந்தனர்.
காவல்துறையினர் அவர்களிடம் விசாரித்த போது ஏற்கனவே பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த பொதுக்கிணற்றை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டதால் அதனை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்கள். இதையடுத்து இரண்டு பேரையும் காவல்துறையினர் அறிவுறுத்தி அனுப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.