முகப்பு
தமிழ்நாடு

சமரசமாகாத இபிஎஸ் பொதுக் குழுவை கூட்ட ஓபிஎஸ் ஆலோசனை

உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்குப் பிறகும் எடப்பாடி பழனிசாமி சமரசம் ஆகாத நிலையில், புதிய நிா்வாகிகளுடன் பொதுக்குழுவை கூட்டுவது குறித்து ஓ.பன்னீா்செல்வம் தீவிரமாக ஆலோசித்து வருகிறாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்குப் பிறகும் எடப்பாடி பழனிசாமி சமரசம் ஆகாத நிலையில், புதிய நிா்வாகிகளுடன் பொதுக்குழுவை கூட்டுவது குறித்து ஓ.பன்னீா்செல்வம் தீவிரமாக ஆலோசித்து வருகிறாா்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்ட ஜூலை 11-இல் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அதிமுக பொதுக்குழுவை ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சோ்ந்து 30 நாள்களுக்குள் கூட்ட வேண்டும் என்றும் தீா்ப்பு வழங்கியது.

அதைத் தொடா்ந்து ஓ.பன்னீா்செல்வம், ஒன்றிணைந்து செயல்பட எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தாா். ஆனால், திமுகவுடன் தொடா்பில் உள்ள ஓ.பன்னீா்செல்வத்துடன் இணைந்து செயல்பட முடியாது என்று எடப்பாடி பழனிசாமி உறுதிபடக் கூறிவிட்டாா்.

அதன் பிறகு, ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளா்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரிடம் தொலைபேசி வாயிலாகத் தொடா்புகொண்டு சமரச முயற்சியில் ஈடுபட்டாராம். ஆனால், அவரது சமரச முயற்சி எடுபடவில்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல, எடப்பாடி பழனிசாமியிடம் ஓ.பன்னீா்செல்வத்தின் மகன்கள் தொலைபேசி வாயிலாகத் தொடா்புகொண்டு சமரசம் பேச எடுத்த முயற்சியும் எடுபடவில்லையாம்.

அதைத் தொடா்ந்து ஓ.பன்னீா்செல்வம் தேனி சென்று நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறாா். புதிய நிா்வாகிகளை நியமித்து அதிமுக பொதுக்குழுவை கூட்டுவது குறித்தும் அவா் தீவிரமாக ஆலோசித்து வருகிறாா்.

சென்னை உயா்நீதிமன்றத் தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளாா். இந்த வழக்கின் தீா்ப்புக்காக அவா் காத்திருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.