குடும்பப் பிரச்னை: தாயை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்திய மகன்! (விடியோ)
பட்டுக்கோட்டை அருகே பெற்ற தாயை மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டை அருகே பெற்ற தாயை மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி தையல்நாயகி (45). இவர்களது மகன் கந்தவேலு (27).
கந்தவேலு திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஒரு வாரத்துக்கு முன் சொந்த ஊருக்கு வந்த நிலையில் தாய் தையல்நாயகிக்கும் மகன் கந்தவேலுக்கும் இடையே இன்று காலை குடும்ப பிரச்னை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கந்தவேலு வீட்டில் இருந்த பெட்ரோலை தையல்நாயகி மேல் ஊற்றி தீ வைத்துள்ளார். உடலில் தீ வேகமாகப் பரவியதால் வேதனை தாங்காமல் அவர் அலறித் துடித்துள்ளார்.
இதனை அடுத்து கந்தவேலு அங்கிருந்து உடனடியாக தப்பி ஓடிவிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக தையல்நாயகியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்ல அறிவுறுத்தினர்.
அதன்படி, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி தகவல் அறிந்த வட்டாரத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கந்தவேலுவை தேடி வருகின்றனர்.
பெற்ற மகனே தாயை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய சம்பவம் பட்டுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.