மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காகவும் 20 மாவட்டங்களுக்கு குடிநீருக்காகவும் தண்ணீர் வழங்குகிறது மேட்டூர் அணை.
தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் மேட்டூர் அணைக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் வரும். போலீசார் மேட்டூர் அணையில் வெடிகுண்டு சோதனை நடத்துவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதும் நடந்து வந்தது. அதன் பிறகு முன்னாள் ராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மேட்டூர் அணை பூங்கா பல ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்தது. பின்னர் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று மேட்டூரில் இருந்து சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், மேட்டூர் அணையில் வெடிகுண்டு வெடிக்கும் என கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார்.
நேற்று இரவு 9 மணி அளவில் வெடிகுண்டு நிபுணர்கள், காவல்துறை மோப்ப நாய் மற்றும் அதிரடிப் படையினர் மேட்டூர் அணை பூங்கா அணையின் வலது கரை உள்ளிட்ட பகுதிகளில் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். மக்கள் எளிதில் சென்று வரும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப் படுத்த உத்தரவிட்டுள்ளனர்.
பொதுப்பணித்துறை பணியாளர்களையும் முன்னாள் ராணுவத்தினர் கண்காணித்து வருகின்றனர். மேட்டூர் அணையின் வலது கரை, இடது கரை உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமான நபர்கள் நடமாட்டம் இருந்தால் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொலைபேசியில் மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.