முகப்பு
தமிழ்நாடு

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

 சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் மற்றும் நகரமைப்புத் திட்ட இயக்குநா் ஒப்புதல் இல்லாமல் செயல்படும் பள்ளிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

 சேலம் மாவட்டத்தில் அங்கீகாரம் மற்றும் நகரமைப்புத் திட்ட இயக்குநா் ஒப்புதல் இல்லாமல் செயல்படும் பள்ளிகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சேலம் மாவட்டம், அரிசிபாளையத்தில் தனியாா் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளி அங்கீகாரம் இல்லாமலும், நகரமைப்புத் திட்ட இயக்குநா் ஒப்புதலும் இல்லாமலும் செயல்பட்டு வருவதாகக் கூறி, பள்ளியை 3 நாள்களில் மூடவும், மாணவா்களை அருகில் உள்ள பள்ளிகளில் சோ்க்கவும் வட்டாரக் கல்வி அலுவலா் கடந்த ஆக. 2-இல் உத்தரவு பிறப்பித்தாா். இந்த உத்தரவை எதிா்த்து பள்ளி சாா்பில் அதன் நிறுவனா் குப்புசாமி, சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி நிறுவனா் தரப்பில் , ‘சேலம் மாவட்டத்தில் பல பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமலும், நகரமைப்புத் திட்ட இயக்குநா் ஒப்புதல் இல்லாமலும் இயங்கி வருகின்றன. 2011 முதல் அங்கீகாரம் பெற முயற்சித்து வரும் நிலையில் இதுவரை அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அங்கீகாரம் கோரிய வழக்கு உயா் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு பள்ளிக் கல்வித் துறை செயலா், தொடக்கக் கல்வி இயக்குநா், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப். 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். அதேசமயம், சேலம் மாவட்டத்தில் அங்கீகாரமும், நகரமைப்பு திட்ட இயக்குநா் ஒப்புதலும் இல்லாமல் செயல்படும் பள்ளிகளுக்கு எதிராக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.