மதுரை: செயல்படாத அரசாக உள்ள திமுக அரசு வரும் 2026 தேர்தலில் மோசமான தோல்வியை சந்திக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
மதுரை பழங்காநத்தத்தில் உள்ள சோமசுந்தரம் பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் சட்டப்பேரவை உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற சட்டப்பேரவை உறுப்பினர் செல்லூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, மதுரை மேயர் நிதியமைச்சரின் நிழலாகச் செயல்படுகிறார். மாநகராட்சியில் எந்தவொரு பணியும் செயல்படுத்தப்படவில்லை. மாநகராட்சி இயங்குகிறதா? என்பதே தெரியவில்லை என தெரிவித்தார்.
மேலும், செயல்படாத அரசாக உள்ள திமுக அரசு, ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒன்றும், எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்றும் பேசி வருகிறது.
இதையும் படிக்க | கொடநாடு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
உதயநிதிக்கு படம் வழங்காததால் பல படங்கள் முடங்கிக் கிடக்கிறது என்றவர், முதல்வரின் மருமகன் சபரீசனின் கண் பார்வைக்காக அதிகாரிகள் காத்திருக்கிறார்கள் என்றார்.
மேலும், நீதிமன்ற தீர்ப்பு எப்படி வந்தாலும் கவலையில்லை. அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளனர். திமுக அரசு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். முதல்வர் விளம்பரம் தேடாமல் மக்களுக்காகச் சிந்துத்து திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
திமுக எங்களுக்கு பங்காளி உறவுமுறை என்றவர், 2026 தேர்தலில் மோசமான தோல்வியை திமுக சந்திக்கும். அதிமுக ஆட்சி அமைக்கும். 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 இடங்களில் வெற்றி பெறும் என செல்லூர் ராஜூ கூறினார்.