கூட்டுறவு சிக்கன நாணயச் சங்கத்தில் தீ: சங்கத் தலைவர் உள்பட இருவர் கைது
திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள கல்வித்துறை கூட்டுறவு சிக்கன நாணயச்சங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக சங்கத்தின் தலைவர் உள்பட இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருநெல்வேலி: திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள கல்வித்துறை கூட்டுறவு சிக்கன நாணயச்சங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக சங்கத்தின் தலைவர் உள்பட இருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
திருநெல்வேலி வண்ணார்பேட்டையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட அரசு ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை பணியாளர்களுக்கான கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் உள்ளது. இந்நிலையில், இக்கட்டத்தில் இருந்து புகை வருவதாக திங்கள்கிழமை (ஆக.29) அதிகாலையில் பாளையங்கோட்டைதீயணைப்புத் துறையினருக்குக் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்குச் சென்று தீயை அணைத்தனர். இதில், அங்குள்ள கோப்புகள் சில தீயில் எரிந்து சேதமாகின. தீ விபத்து குறித்து சங்கத்தின் செயலர் மந்திரமூர்த்தி பாளையங்கோட்டை போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், தீவிபத்து நடந்த சங்க அலுவலகத்தில் கதவு திறந்து கிடந்ததால் சந்தேகம் அடைந்த போலீஸார், அச்சங்கத்தில் வேலை செய்பவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சங்கத் தலைவர் பிரபாகரன் (55), தற்காலிக ஊழியர் தினேஷ் (35) ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அரசுக் கோப்புகளை அழிக்க முயன்றதாக அவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.