முகப்பு
தமிழ்நாடு

திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் கடைஞாயிறு கொடியேற்றம்!

நவக்கிரகங்களில் ராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைப்பெற்றது.

Updated On : 2 டிசம்பர், 2022 at 11:39 AM
மங்களராகுவாக அருள்பாலிக்கும் ஸ்ரீராகுபகவான்
பகிர்:

நவக்கிரகங்களில் ராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில் ராகுவிற்குரிய ஸ்தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தை திருமால், பிரம்மா, இந்திரன், சந்திரன், சூரியன் ஆகிய தேவர்களும், கௌதமர், மார்கண்டேயர், பராசரர் ஆகிய முனிவர்களும், நளன், பகீரதன், சம்புமாலி, சந்திரவர்மா ஆகிய மன்னர்களும் வழிபட்டுள்ளனர். 

இத்தலத்தில் ஸ்ரீராகுபகவான் திருமண கோலத்தில் நாகவல்லி, நாககன்னி என்ற இரு மனைவியருடன் மங்களராகுவாக அருள்பாலிக்கிறார். இவருக்கு பால் அபிஷேகம் செய்வித்தால் ராகுதோஷம் நீங்கும்.

Advertisement

இத்தகைய பெருமைமிகு தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா 11 நாள்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் இவ்விழா வெள்ளிக்கிழமை காலை அலங்கரிக்கப்பட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருள, கொடிமரத்திற்கு மாப்பொடி, திரவியப்பொடி, மஞ்சள்பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் மற்றும் கடங்களில் உள்ள புனிதநீரை கொண்டு, சிறப்பு அபிஷேகங்கள் செய்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க தனுர் லக்னத்தில் நந்திம்பெருமான் பொறித்த திருக்கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. 

தொடர்ந்து மகாதீபாராதனை செய்விக்கப்பட்ட பின்னர், சுவாமிகளுக்கும் மகா தீபாராதனைகள் செய்யப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7 ஆம் நாளான 8 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை திருக்கல்யாணமும், 9 ஆம் நாளான 10 ஆம் தேதி சனிக்கிழமை திரு தேரோட்டமும் தொடர்ந்து 10 ஆம் நாளான 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மல்லாரி இசை திருவிழாவும், அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் திருக்கோயிலின் சூரிய புஷ்கரணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் ஒருசேர எழுந்தருள கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி நடைபெறுகிறது பிறகு 11 ஆம் நாளான 13 ஆம் தேதி திங்கள்கிழமை விடையாற்றி உற்சவத்துடன் இவ்வாண்டிற்காண கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா இனிதே நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடதக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.