குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவைச் சந்தித்து பேசினார்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள் துறை அமைச்சர் அமித் ஷாவையும் ஓ.பி.எஸ். தனியாக சந்தித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் முதல்வராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பூபேந்திர படேல் இன்று (டிச.12) பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.
தமிழகத்திலிருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார். இதற்காக நேற்று மாலை அவர் குஜராத் புறப்பட்டுச் சென்றார்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள் துறை அமைச்சர் அமித் ஷாவை, ஓபிஎஸ் சந்தித்துப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவை நேரில் சந்தித்து ஆலோசித்தார். அப்போது, புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.