மயானப் பாதைக்காக 30 ஆண்டுகளாகப் போராடும் சேலம் காடையாம்பட்டி மக்கள்!
சேலம் காடையாம்பட்டி அருகே 30 ஆண்டுகளுக்கு மேலாக மயானத்திற்கு பாதை வசதி இல்லாமல் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
சேலம்: சேலம் காடையாம்பட்டி அருகே 30 ஆண்டுகளுக்கு மேலாக மயானத்திற்கு பாதை வசதி இல்லாமல் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். மயானத்திற்கு ஒதுக்கிய நிதியை அதிகாரிகள் தன்வசப்படுத்திக் கொண்டதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம் காருவள்ளி ஒன்றியத்துக்கு உள்பட்ட மரக்கோட்டை மற்றும் பாரதிபுரத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் வசிக்கும் பகுதியில் மயானத்திற்குச் செல்ல போதிய பாதை வசதிகள் இல்லை எனக் கூறி கடந்த 25 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2005ல் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு மயானத்திற்கு செல்ல பாதை அமைக்கை நிலம் ஒதுக்கீடு செய்து அதற்காக 11,25,000 ரூபாய் ஊராட்சி நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால் இதுவரை பாதையை சீரமைக்கவோ ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்துவோ அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை. இதனால் இறந்தவர்களை கைத் தாங்கலாகவும் முட்புதர்களுக்கு இடையே வாகனங்களில் கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட காடையாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கேட்டால் ஒதுக்கப்பட்ட நிதி வேறு ஒரு திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டு விட்டதாகவும் தற்போது பாதையை சீர் செய்ய போதுமான நிதி இல்லாததால் காலதாமதம் ஆவதாகவும் கூறுகின்றனர்.
ஆனால், ஒதுக்கப்பட்ட நிதியை பாதை அமைத்ததாகக் கூறி அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் இறந்த ஒருவரின் சடலத்தை அடக்கம் செய்ய, பாதை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் வாகனத்தில் முட்புதற்களுக்கு இடையே விவசாய நிலத்தின் வழியாக பிரேததை எடுத்து வந்து அடக்கம் செய்தனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடிவரும் எங்களுக்கு இதுவரை மயானத்திற்குச் செல்ல பாதை வசதி கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தலித் என்ற ஒரே காரணத்திற்காக அதிகாரிகள் தங்களை புறக்கணிப்பதாகவும் இதுகுறித்து பல்வேறு துறைச் சார்ந்த அதிகாரியிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் எனவே இனியாவது தங்களுக்கு பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அபபகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.