கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் உயர்ந்ததன் எதிரொலியாக தேக்கடி ஏரியில் தண்ணீர் கடல்போல் நிரம்பியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் புதன்கிழமை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 141.70 அடி உயரமாக இருந்தது, (மொத்த உயரம் 152 அடி). நீர் இருப்பு 7,571 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து வினாடிக்கு 454.03 கன அடியாகவும், அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 250 கன அடியாகவும் இருந்தது. நீர் பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் மழை இல்லை, தேக்கடி ஏரியில் 0.2 மில்லி மீட்டர் மழை பெய்தது.
கடல் போல் ஏரி:
முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டம் 141.70 அடி உயரமாக இருந்தது, காரணம் ரூல் கர்வ் விதியின் கீழ் வரும் மார்ச் 31 வரை அணையில் நீர் மட்டும் 142 அடி நிலை நிறுத்த வேண்டும் என்பதால் தமிழக பகுதிக்கு குறைந்த அளவான தண்ணீர் (அதாவது வினாடிக்கு 250 கன அடி மட்டும்), திறந்து விடப்படுகிறது. அதன் காரணமாக தேக்கடி ஏரியில் நீர் நிறைந்து பரந்து விரிந்த கடல் போல் காணப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்காக படகுகள் வழக்கம் போல் 5 முறை இயக்கப்படுகிறது.