திருச்சி: என்றும் நான் உங்கள் பொறுப்பான செல்லப்பிள்ளையாக இருப்பேன் என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் விழாவில் 2764 மகளிர் சுயஉதவிக் குழுக்களின் 54,654 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 78 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு மற்றும் இதர பயன்களையும், 33 சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகளையும், 8 வங்கிகளுக்கு மாநில அளவிலான வங்கியாளர் விருதுகளையும் வழங்கினார்.
முதல்வர் பங்கேற்ற விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
திருச்சிக்கு பலமுறை வந்துள்ளேன். அமைச்சராக முதன் முறையாக வருகிறேன். திருச்சி மாவட்ட மக்கள் அளித்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
1989 ஆம் ஆண்டு தர்மபுரியில் முன்னாள் முதல்வர் கருணாந்தி சுயஉதவி குழுவை தொடங்கி வைத்தார், தொடர்ந்து அதனை 1996 ஆம் இயக்கமாக மாற்றி தமிழகத்தில் மாவட்ட முழுவதும் விரிவாக்கம் செய்தார். இத்திட்டத்தை 4 லட்சம் கிராம பகுதிகளுக்கும் கொண்டு சென்றார்.
இதையும் படிக்க | 2021-ல் 4.12 லட்சம் சாலை விபத்துகளில் 1.53 லட்சம் பேர் பலி: அதிர்ச்சி தகவல் வெளியீடு!
2020- 21 இல், 16,000 புதிய குழு உருவாக்கி திராவிட மாடல் ஆட்சியில் சுயஉதவிக் குழு முதன்மை பெற்று வருகிறது. இதன் பெருமை தாய்மார்களை சேரும். பிற மாநிலத்திலும் இத்திட்டம் சென்றடைந்துள்ளது.
2021 இல் 16 லட்சம் சுயஉதவிக்குழுவுக்கு ரூ. 2800 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சுயசார்பு பெற்று பெண்கள் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சுயஉதவிக்குழு செயல்படுகிறது.
முதல்வராக பதவியேற்றவுடன் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை 100 கோடி பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்படுத்தி உள்ளனர்.
தொடர்ந்து புதுமை பெண் திட்டம், புதிய புரட்சி திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
2021-22 இல் ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 4 லட்சம் பேர் பயனாளிகளாக உள்ளனர்.
தற்போது சுயஉதவிக்குழுவிற்கு ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து 2023 மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்றுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து சுய உதவிக் குழுவினர் பல்வேறு பயன் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெறும் இந்த நிகழ்வில் 42,081 சுயஉதவிக் குழுவை சேர்ந்த பெண்களுக்கு ரூ.2,548 கோடி நிதியுதவி, 33 சமுதாயம் சார்ந்த பெண்களுக்கு மணிமேகலை விருது, சிறந்த முறையில் செயலாற்றும் வங்கியில் 8 வங்கியாளர்களுக்கு வங்கியாளர் விருது வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழுவின் திட்டத்தில் பயன பொறாதவர்கள் இல்லை எனலாம்.
மேலும், திருச்சிக்கு முதல்வரின் மகனாக, கலைஞரின் பேரனாக அமைச்சராக வந்தாலும் என்றும் உங்கள் பொறுப்பான செல்லப்பிள்ளையாக இருக்க விரும்புகிறேன் என உதயநிதி கூறினார்.