விஜய் மக்கள் இயக்கம் யாருக்கும் ஆதரவு அளிக்கவில்லை: பொதுச் செயலாளர்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்தே போட்டியிடும் என இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்தே போட்டியிடும் என இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறவுள்ளன. இதில், விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் அறிவித்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், புஸ்ஸி ஆனந்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாட்டில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய்யின் உத்தரவுபடி விஜய் மக்கள் இயக்கம் எந்த கட்சியுடனும் கூட்டணியோ, ஆதரவோ இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது.
எனவே விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுக்காக அனைத்து மாவட்ட தலைவர்களும், அணி தலைவர்களும், ஒன்றிய, நகர, பகுதி தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், ரசிகர்களும் முழுமூச்சுடன் பிரசாரம் செய்து, விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக செய்த நற்பணிகளை, மக்களிடத்தில் கொண்டு சேர்த்து நம் இயக்கத்தின் வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.”