முகப்பு
தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது: இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்

கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:29 AM
பகிர்:

நாகப்பட்டினம்: கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நாகை,  கீச்சாங்குப்பம்  சேவாபாரதி குடியிருப்பைச்  சேர்ந்தவர் சிவா (34). இவருக்குச் சொந்தமான விசைப் படகில்,  கீச்சாங்குப்பத்தை சேர்ந்த சின்னதுரை (60),  சிவபாரதி ( 27), சௌந்தர்ராஜன் (34), நாகை நம்பியார் நகரை சேர்ந்த பிரகாஷ் (35),  செல்வம்( 45 ), அக்கரைப்பேட்டையை சேர்ந்த
செல்வநாதன் (29), ரெத்தினசாமி (34), மயிலாடுதுறை மாவட்டம், சந்திரப்பாடியை சேர்ந்த  அய்யப்பன் (40), முருகேசன்(55) ஆகிய 9 பேரும், நாகை துறைமுகத்தில் இருந்து  புதன்கிழமை காலை  மீன்பிடிக்கக் கடலுக்கு சென்றனர். 

அவர்கள் புதன்கிழமை மாலை கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத்தாண்டி வந்து இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பில் ஈடுபட்டதாக, 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு,  மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர். 

மீனவர்களுக்கு முதல் கட்டமாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

பின்னர்,  அவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, யாழ்பாணம் சிறையில் அடைக்கப்படுவர் என தெரிகிறது.

இதேபோல காரைக்கால் துறைமுகத்தில் இருந்து சென்ற 13 மீனவர்களை  இலங்கை கடற்படையினர் கைது செய்து மயிலட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர். 

கடந்த 23 நாள்களில் 72 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதில் 21 மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 22 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும்,கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.