இரண்டாம் உலக போருக்கு பிறகு நடைபெறும் மிக பெரிய தாக்குதலாக உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு கருதப்படுகிறது. உக்ரைன் தலைநகர் கிவ்வை நோக்கி ரஷியா ராணுவம் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், அவர்களுக்கு எதிராக உக்ரைன் பாதுகாப்பு படை பதிலடி அளித்துவருகிறது.
இதற்கிடையே, அங்கிருந்து முதற்கட்டமாக 219 இந்தியர்கள், ஏர் இந்தியா விமானம் மூலம் தாய் நாட்டிற்கு அழைத்துவரப்படுகின்றனர்.
ருமேனியாவிலிருந்து புறப்பட்ட சிறப்பு விமானம் இன்றிரவு மும்பை வந்தடையும். மாணவர் மீட்புப் பணிகளைத் தனிப்பட்ட அளவில் தாம் கண்காணித்துவருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், போர் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாணவர்களை முன்னெச்சரிக்கையாகவே மீட்டிருக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கூறுவருகின்றனர்.
இந்நிலையில், போர் நடைபெறும் என இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டிருந்ததாக மதுரை எம்பி சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | 'நானும் அமைச்சர்களும் கீவில்தான் இருக்கிறோம்' - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த உக்ரைன் அதிபர்
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், "ஜனவரி 9 அன்று வெளியிடப்பட்ட எமது கட்சியின் அகில இந்திய மாநாட்டின் தீர்மானம் 2 மாதத்திற்க்கு முன்பே உக்ரைனில் நிகழப்போகும் தாக்குதல் குறித்து தெளிவாக முன்வைக்கிறது.
20000 க்கும் மேற்பட்ட நமது மாணவர்கள் கல்விபயிலும் உக்ரைனின் இந்திய தூதுவரோ அன்று காலை செய்தியைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்கிறார்.
தெரிந்துகொள்வதற்கும் புரிந்துகொள்வதற்குமான அடிப்படையே அரசியல்" எனக் குறிப்பிட்டுள்ளார்.