முகப்பு
தமிழ்நாடு

பச்சமலைக்கு சுற்றுலா சென்ற இளைஞர் நீரில் மூழ்கி சாவு

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் உள்ள பச்சமலை பகுதிக்கு நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலா சென்ற இளைஞர் நீர்வீழ்ச்சியை பார்த்து நின்றவாறு படம் பிடித்த போது தேங்கியிருந்த நீருக்குள் மூழ்கி உயிரிழந்தார

Updated On : 28 பிப்ரவரி, 2022 at 10:12 PM
நீரில் மூழ்கி உயிரிழந்த ஹரி கிருஷ்ணன்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:02 PM

துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்தில் உள்ள பச்சமலை பகுதிக்கு நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலா சென்ற இளைஞர் நீர்வீழ்ச்சியை பார்த்து நின்றவாறு படம் பிடித்த போது தேங்கியிருந்த நீருக்குள் மூழ்கி உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மின் நகரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் மகன் ஹரிகிருஷ்ணன்(20). பொறியியல் படித்து விட்டு கார் ஓட்டுனராக பணி செய்கிறார்.

இவர் தனது ஊரைச் சேர்ந்த சதீஷ்(22), சங்கர்(26),  ராஜகுருநாதன்(20), கிருஷ்ணா(21) ஆதி(20), ஆகாஷ்(19) உள்ளிட்ட நண்பர்களுடன் சேர்ந்து பச்சமலைக்கு சுற்றுலா சென்றார். இவர்களில் யாருக்கும் நீச்சல் தெரியாதாம்.
இந்த நிலையில் இவர்கள் வண்ணாடு ஊராட்சிக்குள்பட்ட கோரையாறு நீர்வீழ்ச்சியைக் காண சென்றனர்.

Advertisement

பச்சமலை புதூர் அருகே உள்ள.கோரையாறு நீர்வீழ்ச்சி பகுதியில் ஹரி கிருஷ்ணனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்ட துறையூர் தீயணைப்புத் துறை பணியாளர்கள்

அப்போது ஹரிகிருஷ்ணன் தன் இரண்டு  கைகளையும் கிடைமட்டமாக அகல விரித்து  நீர்வீழ்ச்சியை பார்த்தபடி ஒரு பாறை மீது நிற்க அவருக்கு பின்னால் சற்று தொலைவில் மற்ற நண்பர்கள் நின்று கேமராவில் படம் பிடித்தனர்.

அப்போது ஹரிகிருஷ்ணன் வேகமாக நண்பர்களை பார்க்கத் திரும்பிய போது தான் நின்ற பாறையிலிருந்து வழுக்கி பாறையிலிருந்து நீர் விழுந்து தேங்கும் இடத்தில் விழுந்து தத்தளித்தார். இதனைக் கவனித்து சதீஷும், சங்கரும் நீர் தேங்கும் பகுதியின் ஆழம் தெரியாமல் ஹரிகிருஷ்ணனை மீட்க நீருக்குள் குதித்து அவர்களும் தத்தளித்தனர்.

கரைக்கு அருகிலிருந்த சங்கரையும், சதீஷையும் ராஜகுருநாதனும், கிருஷ்ணாவும் கரையிலிருந்தவாறு தூக்கி காப்பாற்றினர். கைக்கு எட்டாத தூரத்தில் நீரில் மூழ்கிய ஹரிகிருஷ்ணனை யாராலும் காப்பாற்ற இயலவில்லை. இந்த நிலையில் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

தகவலறிந்து துறையூர் தீயணைப்புத்துறையினர் பச்சமலை சாலையில் ஏறுவதற்கு ஏற்ற பெரம்பலூர் தீயணைப்புத்துறைக்கு சொந்தமான சிறிய மீட்பு வாகனத்தை விபத்து நிகழ்விடத்திற்கு சென்று சடலத்தை மீட்டனர். துறையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஹரிகிருஷ்ணனின் சடலம் துறையூர் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.