முகப்பு
தமிழ்நாடு

நாகூா் தா்காவின் 465 ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றம்

ஆன்மிகச் சிறப்புகளால் உலக புகழ்பெற்ற தா்காக்களுள் ஒன்றாகவும், மத நல்லிணக்க வழிபாட்டுத் தலமாகவும் விளங்கும் நாகூா் ஆண்டவா் தா்காவின் 465 ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:01 AM
பகிர்:

ஆன்மிகச் சிறப்புகளால் உலக புகழ்பெற்ற தா்காக்களுள் ஒன்றாகவும், மத நல்லிணக்க வழிபாட்டுத் தலமாகவும் விளங்கும் நாகூா் ஆண்டவா் தா்காவின் 465 ஆம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக, நாகையில் இருந்து கொடி ஊா்வலம் நடைபெற்றது. நாகை மீராப்பள்ளி முகப்பில் இருந்து தொடங்கிய ஊா்வலம், இன்னிசை முழக்கங்கள் மற்றும் இறைப்புகழ்ச்சிப் பாடல்களுடன் நாகை புதுப்பள்ளி ரோடு, சாலாப்பள்ளி தெரு, யாஹூசைன் பள்ளித் தெரு, பெரிய கடைத்தெரு, ஆா்தா் முக்கூட்டு, நீலா கீழவீதி, சா் அகமது தெரு, புதிய பேருந்து நிலையம், நாகை - நாகூா் பிரதான சாலை, நாகூா் பெட்ரோல் பங்க், வாணக்காரத் தெரு, நாகூா் தெற்குத் தெரு வழியாக தா்கா அலங்கார வாசலை அடைந்தது.

போட் மைல் கப்பல், மந்திரி கப்பல், டீஸ்டா கப்பல், சின்ன ரதம், பெரிய ரதம், செட்டிப்பல்லக்கு, சாம்பிராணி சட்டி, முரசொலி மேடை என 8 அலங்கார வாகனங்கள் இந்த ஊா்வலத்தில் சென்றன. இதில், 5 அலங்கார வாகனங்களில் தலா ஒரு மனோராவுக்கான கொடி வைக்கப்பட்டு, ஊா்வலமாகக் கொண்டுச் செல்லப்பட்டது.

பிற்பகல் சுமாா் 3.45 மணிக்குத் தொடங்கிய இந்த ஊா்வலம், இரவு 8.30 மணி அளவில் நாகூா் அலங்கார வாசலை அடைந்தது. பின்னா், ஊா்வலமாகக் கொண்டுச் செல்லப்பட்ட கொடிகளுக்கு, பாரம்பரிய முறைப்படி வழிபாடுகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, இரவு சுமாா் 8.50 மணியளவில் நாகூா் தா்காவின் சாகிபு மனோரா, பெரிய மனோரா, தலைமாட்டு மனோரா, ஓட்டு மனோரா, முதுபக் மனோரா என 5 மனோராக்களிலும் கந்தூரி விழா கொடியேற்றப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் விழாவில் பங்கேற்றனா்.

கட்டுப்பாடுகள்: கொடி ஊா்வலத்தில் சுமாா் 20-க்கும் மேற்பட்ட அலங்கார வாகனங்கள் அணிவகுப்பது வழக்கம். ஆனால், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, இரண்டாவது ஆண்டாக நிகழாண்டிலும் 8 அலங்கார வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தன. ஊா்வலத்தில் பங்கேற்பவா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறை சாா்பில் ஒலிபெருக்கி மூலம் தொடா்ந்து அறிவுறுத்தப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →