முகப்பு
தமிழ்நாடு

கரோனா நோயாளிகளுக்கு சிறப்பு ஆம்புலன்ஸ்கள்: துவக்கி வைத்தார் முதல்வர்

சென்னையில் கரோனா நோயாளிகளை அழைத்துச் செல்வதற்காக சிறப்பு ஆம்புலன்ஸ் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை துவக்கி வைத்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:02 AM
பகிர்:

சென்னையில் கரோனா நோயாளிகளை அழைத்துச் செல்வதற்காக சிறப்பு ஆம்புலன்ஸ் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை துவக்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (6.1.2022) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்று பாதித்த நபர்களை அழைத்து செல்வதற்கு ஏதுவாக 42 சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் கோவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனையின்படி, ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை அதிகப்படுத்துதல், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை அவர்களின் இல்லங்களிலிருந்து முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்களுக்கு அழைத்து செல்ல ஏதுவாக சிறப்பு கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்துதல், கோவிட் தடுப்பூசிகளை தகுதியான அனைவருக்கும் செலுத்திட மெகா கோவிட் தடுப்பூசி முகாம் நடத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சியில் கரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களை அவர்களின் இருப்பிடங்களிலிருந்து முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்களுக்கும், பரிசோதனைகளுக்கு பிறகு கரோனா பாதுகாப்பு / சிகிச்சை மையங்களுக்கோ அல்லது மருத்துவமனைகளுக்கோ அழைத்து செல்ல ஏதுவாக 250 கார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் 12.05.2021 அன்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் இந்தியாவிலேயே முதன்முதலில் சென்னை மாநகராட்சியில் தொடங்கப்பட்டது. தேசிய அளவில் வரவேற்பினை பெற்ற இத்திட்டம் அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றப்பட்டது.

மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் அவர்கள் இந்தக் கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக தமிழ்நாடு அரசிற்கும்,  தமிழ்நாடு முதலமைச்சர் பாராட்டினை தெரிவித்தார்.

இத்திட்டத்தை விரிவுப்படுத்தும் வகையில், கோவிட் தொற்று பாதித்த நபர்களை அழைத்து செல்வதற்கு ஏதுவாக 42 சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவை முதலமைச்சர் தொடங்கி வைக்கப்பட்டது.

ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு ஓட்டுநர் மற்றும் 1 கோவிட் களப்பணியாளர் கோவிட் கவச உடை (PPE Kit) அணிந்து பணியில் ஈடுபடுவர். இவர்கள் கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட நபர்களை அவர்களின் இருப்பிடங்களிலிருந்து முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்களுக்கும், பரிசோதனைகளுக்கு பிறகு கொரோனா பாதுகாப்பு (அ) சிகிச்சை மையங்களுக்கோ (அ) மருத்துவமனைகளுக்கோ அழைத்து செல்வர். இந்த வாகனத்தில், தொற்று பாதிக்கப்பட்டவர்களால் ஓட்டுநர் மற்றும் கோவிட் களப்பணியாளருக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தடுப்பு அமைக்கப்பட்டிருக்கும். இச்சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனங்களின் சேவையை பெறுவதற்காக 1913 என்ற கட்டணமில்லா எண்ணிற்கும், 044-25384520 மற்றும் 044- 46122300 ஆகிய தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

மண்டலங்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை விவரம்

1. திருவொற்றியூர்  3
2. மணலி  2
3. மாதவரம்  2
4. தண்டையார்பேட்டை  3
5. இராயபுரம்  3
6. திரு.வி.க. நகர்  3
7. அம்பத்தூர்  3
8. அண்ணாநகர்  3
9. தேனாம்பேட்டை  3
10. கோடம்பாக்கம்  3
11. வளசரவாக்கம்  3
12. ஆலந்தூர்  3
13. அடையாறு  3
14. பெருங்குடி  3
15. சோழிங்கநல்லூர் 2

மொத்தம்  42

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →