முகப்பு
தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 100 வயது மூதாட்டி

காஞ்சிபுரத்தில் 100 வயதுடைய மூதாட்டி முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட போது உற்சகாகமாக சரண கோஷங்கள் பாடி அனைவரும் நலமுடன் இருக்க வேண்டிக் கொண்டார்.

Updated On : 15 ஜனவரி, 2022 at 2:07 PM
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 100 வயது நிரம்பிய மூதாட்டி மாணிக்கம் அம்மாள்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:38 PM


காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் வசிக்கும் 100 வயதுடைய மூதாட்டி ஒருவர் சனிக்கிழமை முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட போது உற்சகாகமாக சரண கோஷங்கள் பாடி அனைவரும் நலமுடன் இருக்க வேண்டிக் கொண்டார்.

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே எஸ்.எஸ்.கே.நகரில் வசித்து வருபவர் டாக்டர்.சிவ.சண்முகம்(80). இவர் ஸ்ரீபெரும்புதூர் வட்டார மருத்துவ அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சி.ராஜகுமாரி(68), இவரது தாயார் மாணிக்கம்(100)அம்மாளுடன் இருவரும் வசித்து வருகின்றனர். 3 பேரும் ஏற்கனவே இரு தவணைகளும் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தனர். இந்நிலையில் மத்திய,மாநில அரசுகள் 60 வயதைக் கடந்த முதியோர்கள், இணை நோய் உள்ளவர்கள், முன்களப் பணியாளர்கள் 3வதாக முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 3 பேரும் முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்து கொண்டனர்.

மூவரும் முன்பதிவு செய்தபடி சனிக்கிழமை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்து உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

100 வயது நிரம்பிய மூதாட்டியான மாணிக்கம் அம்மாள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊன்று கோல் ஊன்றிக்கொண்டே காரிலிருந்து இறங்கி வந்து தடுப்பூசி மையத்துக்கு வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டார். சிறிதும் தயக்கமின்றி உற்சாகத்துடன் தடுப்பூசி செலுத்திய போது அவர் சரணகோஷங்கள் பாடி அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டார்.

இதுவரை தடுப்பூசி போட பயந்து கொண்டு பலரும் தடுப்பூசி போடாமல் இருந்து வரும் நிலையில் 100 வயது நிரம்பிய மூதாட்டி உற்சாகத்துடன் 3 வதாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டது பலருக்கும் மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.