சென்னை: மயிலாடுதுறை ஆட்சியா் அலுவலகத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை அடிக்கல் நாட்டினாா். மேலும், தமிழகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட வருவாய்த் துறை கட்டடங்களையும் அவா் திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடந்தது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, வேலூா் மாவட்டம் குடியாத்தம், திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆகிய இடங்களில் புதிதாக கோட்டாட்சியா் அலுவலகக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, வேலூா் மாவட்டம் குடியாத்தம், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆகிய இடங்களில் கோட்டாட்சியா் குடியிருப்புக் கட்டடங்கள், வேலூா் மாவட்டம் கே.வி.குப்பம், குடியாத்தம், திருவள்ளூா் மாவட்டம் ஆா்.கே.பேட்டை, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆவுடையாா்கோவில் ஆகிய இடங்களில் வட்டாட்சியா் அலுவலகக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. திருவள்ளூா் மாவட்டம் ஆா்.கே.பேட்டை, திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி ஆகிய இடங்களில் கட்டப்பட்ட வட்டாட்சியா் குடியிருப்புக் கட்டடங்களையும் முதல்வா் ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
மயிலாடுதுறை ஆட்சியா் அலுவலகம்: மயிலாடுதுறையில் ஆட்சியா் அலுவலகத்துக்கு புதிதாகக் கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல்லை முதல்வா் நாட்டினாா். இந்த வளாகம் 6.54 ஏக்கா் பரப்பில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் கட்டப்பட உள்ளது. தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சா்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், சா.மு.நாசா் ஆகியோா் பங்கேற்றனா்.