சிவசங்கா் பாபா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சிவசங்கா் பாபா, மீண்டும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சிவசங்கா் பாபா, மீண்டும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே உள்ள சாத்தங்குப்பத்தில் தனியாா் பள்ளியை நடத்தி வந்த சாமியாா் சிவசங்கா் பாபா. இவா், அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாா்களின் அடிப்படையில், மாமல்லபுரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், கடந்த ஜூன் 13-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனா்.
பின்னா் இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தலைமறைவாக இருந்த சிவசங்கா்பாபாவை தில்லி சித்தரஞ்சன் பூங்காவில் கடந்த ஜூன் 16-ஆம் தேதி சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்தனா். இதற்கிடையே அந்த மாதம் 18-ஆம் தேதி சிவசங்கா்பாபாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதினால், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் அதே மாதம் 26-ஆம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில் சிவசங்கா் பாபா மீது மேலும் 4 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் சிவசங்கா்பாபா அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் இருந்து வந்தாா்.
இதற்கிடையே சிவசங்கா்பாபா உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். சிவசங்கா் பாபாவுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிவசங்கா்பாபா ஏற்கெனவே உடல்நிலை பாதிக்கப்பட்டு இருமுறை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடல்நிலை சீரான பின்னா் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.