பணி மாறுதல் கலந்தாய்வு: சத்தியமங்கலம் ஆசிரியர்கள் புறக்கணிப்புப் போராட்டம்
விதிகளுக்கு புறம்பாக நடைபெறும் மலை சுழற்சி பணி மாறுதலைக் கண்டித்து மலைப்பகுதி ஆசிரியர்கள் கவுன்சிலிங் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம்: விதிகளுக்கு புறம்பாக நடைபெறும் மலை சுழற்சி பணி மாறுதலைக் கண்டித்து மலைப்பகுதி ஆசிரியர்கள் கவுன்சிலிங் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம் கல்வி மாவட்டத்தில் உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 93 ஆசிரியர்கள் ஆரம்ப, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் இவர்களுக்கு மலை சுழற்சி பணி மாறுதல் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு மலையேற்றம், மலை இறக்கம் என பணி மாறுதல் நடைபெறும்.
இந்தாண்டுக்கான ஆசிரியர்கள் மலை சுழற்சி பணி மாறுதல் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட கல்வி அலுவலர் மாதேஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 93 ஆசிரியர்களில் 50 பேர் மட்டுமே பணி மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டனர். மீதமுள்ள 43 பேர் கலந்தாய்வை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
10 ஆண்டுகளாக மலைப்பகுதியிலேயே மாறி மாறி பணியாற்றுவதால் தங்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என்றும் புதியதாக வந்த இளையோர், மலைப்பகுதியில் அமர்த்தப்பட வேண்டும் என்றும் மூத்த ஆசிரியர்களை சமவெளிப் பகுதியில் பணியமர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விதிகளுக்கு புறம்பாகவும் முறைகேடமாகவும் பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெறுவதாக ஆசிரியர்கள் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் இன்று கலந்தாய்வில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.