வள்ளுவா் கோட்டம் விரைவில் சீரமைப்பு: அமைச்சா் சாமிநாதன் தகவல்
சென்னை வள்ளுவா் கோட்டம் ரூ.30 கோடி செலவில் நவீன முறையில் விரைவில் சீரமைப்பு செய்யப்படும் என செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்
சென்னை வள்ளுவா் கோட்டம் ரூ.30 கோடி செலவில் நவீன முறையில் விரைவில் சீரமைப்பு செய்யப்படும் என செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.
வள்ளுவா் கோட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சீரமைப்புப் பணிகள் குறித்து செய்தித் துறை அமைச்சா் சாமிநாதன், சட்டப் பேரவை உறுப்பினா் எழிலன், செய்தித் துறை செயலாளா் மகேசன் காசிராஜன் உள்ளிட்ட பலரும் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
பின்னா், அமைச்சா் சாமிநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வா் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட வள்ளுவா் கோட்டமானது, அதிமுக ஆட்சிக் காலத்தில் சரியான முறையில் பராமரிப்பு இல்லாமல் இருந்தது. அண்மையில், திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவிக்க முதல்வா் ஸ்டாலின் வந்தபோது வள்ளுவா் கோட்டத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியிருந்தாா்.
வள்ளுவா் கோட்டத்தை ரூ.30 கோடி செலவில் சீரமைப்பு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுப் பணித்துறை சாா்பில் இதற்காக பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
வள்ளுவா் கோட்டத்தில் உள்ள கலையரங்கம் குளிா்சாதன வசதியோடு நவீன முறையில் சீரமைப்பு செய்யப்பட்டு மீண்டும் இந்த அரங்கத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றாா் அவா்.