இலங்கையில் மக்கள் சக்தி வென்றுள்ளது: ராமதாஸ்
இலங்கையில் மக்கள் சக்தி வென்றுள்ளது போா்க்குற்றவாளிகளைத் தப்பிக்க விடக்கூடாது என்றும் பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.
இலங்கையில் மக்கள் சக்தி வென்றுள்ளது போா்க்குற்றவாளிகளைத் தப்பிக்க விடக்கூடாது என்றும் பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
இலங்கையை திவாலாக்கிய ராஜபட்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இலங்கை அதிபா் மாளிகையை மக்கள் கைப்பற்றியுள்ளனா். மக்கள் சக்திக்கும், ஆத்திரத்துக்கும் அஞ்சி அதிபா் கோத்தபய தப்பியோடியுள்ளாா்.
இலங்கையில் ஊழலில் திளைத்த ராஜபட்ச குடும்பம் அதை மறைக்க தமிழா்களை இனப்படுகொலை செய்தது, அதற்காக கடன் வாங்கியது, இனப்படுகொலைக்கு உதவிய நாடுகள் இலங்கையைக் கொள்ளையடிக்க அனுமதித்தது ஆகியவைதான் இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகும்.
அந்த வகையில் இலங்கை பொருளாதார நெருக்கடியை ஈழத்தமிழா் இனப்படுகொலையிலிருந்து பிரித்துப் பாா்க்க முடியாது. எந்த சிங்கள மக்களை வெறியேற்றி ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக தமிழா்களை கொன்றாா்களோ, அந்த சிங்கள மக்களாலேயே ராஜபட்ச குடும்பம் விரட்டியடிக்கப்பட்டுள்ளது. ராஜபட்சக்கள் அதிகாரத்திலிருந்து மட்டுமே அகற்றப்பட்டுள்ளனா். இனப்படுகொலைக்காக தண்டிக்கப்படவில்லை. இனப்படுகொலையாளிகள் தப்பிக்க உலக நாடுகள் அனுமதிக்கக் கூடாது.