நடிகையும், பாஜக தலைவருமான குஷ்பூ தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள கருத்து பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
குரு பூர்ணிமா பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரபல நடிகையும், பாஜக தலைவருமான குஷ்பூ திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான கருணாநிதி குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | பிரபஞ்சத்தின் மேலும் அற்புதமான புகைப்படங்கள்: நாசா வெளியீடு
தனது திரையுலக பயணத்திலிருந்து அரசியல் களத்திற்கு வந்த நடிகை குஷ்பூவை திமுகவில் இணைத்து அவரது பயணத்தைத் தொடக்கி வைத்தவர் கருணாநிதி. அவரது வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக குஷ்பூ கருத்து பதிவிட்டுள்ளார்.
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “இந்த குருபூர்ணிமாவில் என்னை அரசியலுக்கு கொண்டுவந்தவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு மனிதம், சமத்துவம், அரசியல் நீதி, சுயமரியாதை உள்ளிட்டவற்றை கற்றுக் கொடுத்த டாக்டர் கலைஞர் என்றைக்கும் நினைவுகூரப்படுவார். அவர் எனது பார்வையில் உயர்ந்த இடத்தில் உள்ளார். நன்றி அப்பா” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | மாலத்தீவிலிருந்து புறப்பட்டார் கோத்தபய: அடுத்து எங்கே?
திமுகவிலிருந்து காங்கிரஸ், பின்னர் பாஜக என தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் குஷ்பூ பதிவிட்டுள்ள பதிவிற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.