கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அரசு தரப்பில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தை யாரும் சந்திக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது: “ கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி தனியார் பள்ளியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் கூறப்பட்டு வருகிறது. ஆனால், மாணவியின் தாயார் அவரது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், பள்ளி நிர்வாகம் சரிவர பதிலளிக்காததாகவும் தெரிவித்துள்ளார். தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் தாயார் செல்வி தெரிவித்தார். கடந்த ஜூலை 10 ஆம் தேதி மகளுடன் தாயார் செல்வி செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பள்ளி நிர்வாகம் ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டார் என ஜூலை 13ஆம் தேதி தெரிவித்தது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது மகள் 13ஆம் தேதிக்கு முன்னதாகவே இறந்துவிட்டதாக தாயார் குற்றம் சாட்டுகிறார்.
இதையும் படிக்க:கலவர பூமியாக மாறிய கனியாமூர் வன்முறை: 35 பேர் கைது
மாணவி இறந்த பிறகு பள்ளி நிர்வாகமோ, மாவட்ட நிர்வாகமோ, காவல் துறையோ அல்லது அரசாங்கமோ அந்த மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை. அவ்வாறு பள்ளி நிர்வாகமோ, மாவட்ட நிர்வாகமோ, காவல் துறையோ அல்லது அரசாங்கமோ அந்த குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அரசு இந்த விவகாரத்தில் செயலிழந்து விட்டது. இதற்கு முழு பொறுப்பு திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தான். மூன்று நாட்களாக மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு போராடி வரும் நிலையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அவர்களுக்கு செவி சாய்க்கவில்லை” என்றார்.