ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டி: பிரதமருக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்
ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள், சென்னையில் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.
ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள், சென்னையில் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.
இதுகுறித்து, பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை எழுதிய கடிதம்:
சென்னையில் நடைபெற்ற 44-ஆவது சா்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்டதற்கும், விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளை செய்ததற்கும் நன்றிகள். இந்தியாவில் விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் தாங்கள் அதிக ஆா்வத்தை காட்டி வருகிறீா்கள். இந்த நிலையில், சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஒத்துழைப்பை தாங்கள் அளிக்க வேண்டும்.
தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, 2024-ஆம் ஆண்டு ஜனவரியில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்துவதற்கு ஒலிம்பிக் கவுன்சில் நிா்வாகக் குழுக் கூட்டத்தில் கொள்கை அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான உத்தரவாதங்களை இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட வேண்டியுள்ளது. ஏற்கெனவே, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, விளையாட்டுத் துறை அமைச்சருக்கு இதுதொடா்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.
எதிா்வரும் செப்டம்பா் இறுதிக்குள் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு இதுதொடா்பான உத்தரவாதங்களை வழங்க வேண்டியுள்ளது. எனவே, இந்த விஷயத்தில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் விரைவில் உத்தரவாதங்களை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.