சர்வதேச ரோட்டரி சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெனிஃபர் ஜோன்ஸ் சென்னையில் ரூ.200 கோடி மதிப்பிலான சமூக நலத்திட்டங்களைத் தொடக்கி வைத்தார்.
117 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பன்னாட்டு தொண்டு நிறுவனமாக ரோட்டரி சங்கம் அறியப்படுகிறது. இந்த சங்கத்தின் தலைவராக முதன்முறையாக பெண் ஒருவர் தலைவராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச ரோட்டரி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெனிஃபர் ஜோன்ஸ் சமீபத்தில் சென்னை வருகை புரிந்தார்.
உலகளவில் பெரிய ரோட்டரி மாவட்டமாக சென்னை திகழ்ந்து வருகிறது. கடந்த வருடத்தில் மட்டும் 11.92 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.64.7 கோடி மதிப்புள்ள 6177 சேவை திட்டங்களை செய்து சாதனை படைத்துள்ளது சென்னை ரோட்டரி (3232).
இந்நிலையில் சென்னை லிவர் பவுண்டேஷன் மற்றும் ரோட்டரி மாவட்டம் 3232 இணைந்து நடத்திய “ஒரு மில்லியன் ஹெபடைடிஸ் தடுப்பூசி இயக்கத்தை” செவ்வாய் (26.07.2022) அன்று சர்வதேச ரோட்டரி தலைவர் ஜெனிஃபர் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், “போலியோ ஒழிப்புத் திட்டத்தில் ரோட்டரியின் அனுபவம், உடல்நலம் தொடர்பான பிற சவால்களைச் சமாளிப்பதற்கான வலிமையையும் கட்டமைப்பையும் பெற்றுள்ளது . மேலும் இந்திய ரோட்டரி சங்கத்தில் பெண்களின் பங்கு என்பது 16 சதவிகிதம் உள்ளது பாராட்டத்தக்கது. இது வருங்காலங்களில் பல மடங்கு அதிகரிக்கும். மேலும் ரோட்டரி சங்கம், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து மார்பக புற்றுநோய் கண்டறியும் திட்டத்தில் இயங்கி வருகிறது” என்று கூறினார்.
இதையும் படிக்க | குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 12 வயது சிறுமி மீட்பு
நிகழ்ச்சிக்குப் பிறகு ஜெனிஃபர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அந்த சந்திப்பின்போது ஹெபடைடிஸ், போலியோ மற்றும் மார்பக புற்றுநோய் போன்ற நோய் தடுப்பு ஆகியவற்றை பற்றி அவருடன் கலந்தாலோசித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.