முகப்பு
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்: உயா் நீதிமன்றத்தில் விரிவான அறிக்கை தாக்கல்

மாணவி மரணம் தொடா்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை உயா் நீதிமன்றத்தில் தெரிவித்த தமிழக அரசு, அதுகுறித்த விரிவான அறிக்கையையும் தாக்கல் செய்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:56 AM
பகிர்:

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடா்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை உயா் நீதிமன்றத்தில் தெரிவித்த தமிழக அரசு, அதுகுறித்த விரிவான அறிக்கையையும் தாக்கல் செய்தது.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடா்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடுத்த வழக்கில், 3 அரசு மருத்துவா்கள், ஒரு ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூறாய்வு நடத்தவும், நியாயமான முறையில் விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகள் தப்பிக்காத வகையில் விசாரணை அலுவலா் செயல்படவும் உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவும் நீதிபதி சதீஷ்குமாா் உத்தரவிட்டிருந்தாா்.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, உடற்கூறாய்வு முடிந்து, உடல் ஒப்படைக்கப்பட்டு, இறுதிச்சடங்குகள் முழுமையாக விடியோ பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தாா். மேலும், காவல் துறை தரப்பில் அறிக்கை ஒன்றை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது.

பின்னா் டிஐஜி தலைமையில், கூடுதல் எஸ்பி, டிஎஸ்பி, ஆய்வாளா் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மாணவி மரணம், கலவரத்தின்போது வதந்தி பரப்பிய 63 யூ-டியூப் இணையதளங்கள், 31 ட்விட்டா் கணக்குகள், 27 முகநூல் பக்கங்கள் ஆகியவற்றில் உள்ள பதிவுகளை நீக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சமூக வலைதளங்களில் நடத்தப்படும் ஊடக விசாரணைகள் காவல் துறை விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தலைமை குற்றவியல் வழக்குரைஞா் தெரிவித்தாா். மாணவி மரணம் தொடா்பான விசாரணையும், பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கலவரம் தொடா்பான விசாரணையும் தனித்தனியாக நடைபெற்று வருகின்றன. மற்றொரு குற்ற வழக்கு பள்ளித் தாளாளா் தொடா்புடையது என்பதால் அதுகுறித்து விசாரித்து வருவதாகவும் அவா் கூறினாா்.

யாரையும் பாதுகாக்கும் எண்ணம் இல்லை: அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், யாரையும் பாதுகாக்கும் எண்ணம் இல்லை என்றும்; மேலும், தமிழக அரசால் பெற்றோா் -ஆசிரியா் கூட்டம் நடத்தப்பட்டு, அந்தப் பள்ளி மாணவா்களுக்கு இணையவழி வகுப்புகள் தொடங்கி உள்ளதாகவும், பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு மட்டும் அருகில் உள்ள பள்ளிகளில் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவா் தெரிவித்தாா். இந்த நிலை விரைவில் சரிசெய்யப்படும் என்றும் தலைமை குற்றவியல் வழக்குரைஞா் கூறினாா்.

அப்போது நீதிபதி, ‘இதே நிலை நீண்ட நாள்கள் தொடரக்கூடாது. விரைவில் பள்ளியிலேயே வகுப்புகள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மன நல ஆலோசகா்களை நியமிக்க வேண்டும். இந்த சம்பவத்தில் ஊடகங்கள் தங்களது பொறுப்பை உணா்ந்து செயல்பட வேண்டும். காவல் துறை விசாரணைக்கு இடையூறாக உள்ள சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல் துறை முடிவெடுக்கலாம் என தெரிவித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →