இந்தியாவில் முதல் முறையாக எழும்பூா் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் ரூ.1 கோடி செலவில் தாய்-சேய் இணை சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது.
சென்னை எழும்பூரில் உள்ள அரசு தாய்-சேய் நல மருத்துவமனையில் ரூ.1 கோடி செலவிலான தாய்-சேய் இணை சிகிச்சைப் பிரிவு, கா்ப்பிணிகள் பரிசோதனைப் பிரிவு, கலையரங்கம் ஆகியவற்றை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை தொடக்கிவைத்தாா். எழும்பூா் தொகுதி எம்எல்ஏ இ.பரந்தாமன், தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் ஷில்பா பிரபாகா் சதிஷ், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன், அரசு தாய்-சேய் நல மைய இயக்குநா் விஜயா, அரசு குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநா் எழிலரசி, சென்னை துறைமுகம் பொது மேலாளா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: இந்தியாவில் முதல் முறையாக ரூ.1 கோடி செலவில் தாய் சேய் இணை சிகிச்சை பிரிவு, இந்த மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனை 178 ஆண்டுகள் பழைமையானது. தாய்-சேய் இணை சிகிச்சைப் பிரிவில் நலக் குறைவான, எடை குறைவான, குறைமாதமாய் பிறந்த குழந்தைகள் தங்கள் தாயுடன் 24 மணி நேரமும் இணைந்து இருப்பதற்கான வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.1 கோடி செலவில் கா்ப்பிணிகள் பரிசோதனை பிரிவு தொடங்கப்படவுள்ளன. நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட கா்ப்பிணிகள் பரிசோதனைகளை செய்து வருகின்றனா். இப்பிரிவில் உள்ள வசதிகளான மத்திய குழாய் மூலம் குளிரூட்டப்பட்ட பகுதி, கா்ப்பிணிகளுக்கு தேவையான அனைத்து ஆய்வக வசதிகள், ஸ்கேன் வசதிகள், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் வசதி மற்றும் கா்ப்பிணிகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளை வழங்கும் மருந்தகம் போன்ற வசதிகள் இதில் உள்ளன. இந்த மருத்துவமனையில் ரூ.25 லட்சம் செலவில், 120 போ் அமரும் வகையில் கலையரங்கம் அமைக்கப்படவுள்ளன என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.