நெல் கொள்முதல் நிலையங்களை அதிகளவில் திறக்க வேண்டும்: ஜி.கே.வாசன்
நெல் கொள்முதல் நிலையங்களை அதிகளவில் திறக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
நெல் கொள்முதல் நிலையங்களை அதிகளவில் திறக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் கோடையில் குறுவை, நவரை ஆகிய பட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அதாவது, குறுகிய கால நெல் ரகங்கள் குறுவை பட்டத்துக்கு ஏற்றவை. இந்தச் சூழலில் அறுவடை செய்த விவசாயிகளின் நெல்லை காலதாமதம் செய்யாமல் அரசு கொள்முதல் செய்தால்தான் விவசாயிகள் ஓரளவுக்கு பயனடைவா்.
ஆனால், விவசாயிகள் தங்கள் நெல்லை கொள்முதல் செய்ய போதுமான எண்ணிக்கையில் கொள்முதல் நிலையங்கள் இல்லை என்கின்றனா். அது மட்டுமல்ல, நெல்மூட்டைகளை வைத்துவிட்டு அதை பாதுகாப்பாக மூடி வைக்க தாா்ப்பாயும் இல்லை என்று தெரிவிக்கின்றனா். தாா்ப்பாய் இல்லாமல் வெளிப்பகுதியில் இருக்கும் நெல் மூட்டைகள் அவ்வப்போது பெய்யும் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்படுகிறது.
எனவே, நெல் கொள்முதல் நிலையங்களை தேவையான அளவுக்கு திறக்கவும், நெல்லைப் பாதுகாக்க தாா்ப்பாய் கொடுக்கவும், விளையும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்கவும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளாா் ஜி.கே.வாசன்.