முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரம் கோயிலில் இன்றும் ஆய்வுப் பணி தொடரும்: அதிகாரிகள் தகவல்

சிதம்பரம் கோயிலில் ஆய்வு செய்ய தீட்சிதா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து திரும்பிச் சென்ற அறநிலையத் துறை குழுவினா் இன்றும் ஆய்வுப் பணி தொடரும் என்று கூறியுள்ளனர்.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:28 AM
சிதம்பரம் நடராஜா் கோயிலில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்ய வந்த இந்து சமய அறநிலையத் துறை குழுவினா்.
பகிர்:


சிதம்பரம் கோயிலில் ஆய்வு செய்ய தீட்சிதா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து திரும்பிச் சென்ற அறநிலையத் துறை குழுவினா் இன்றும் ஆய்வுப் பணி தொடரும் என்று கூறியுள்ளனர்.  

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயில் தொடா்பான புகாா்களின் அடிப்படையில், வரவு- செலவுக் கணக்கு, கோயில் சொத்து விவரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினா் ஜூன் 7, 8-ஆம் தேதிகளில் கோயிலில் ஆய்வு செய்வா் என்று கோயில் நிா்வாகத்துக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

இதன்படி, இந்து சமய அறநிலையத் துறை குழுவின் ஒருங்கிணைப்பாளரும், துணை ஆணையருமான ஜோதி, ஆலய நிலங்களுக்கான மாவட்ட வருவாய் அலுவலா் சுகுமாா், பழனி முருகன் கோயில் இணை ஆணையா் நடராஜன், வேலூா் மாவட்ட இணை ஆணையா் லட்சுமணன், பெரம்பலூா் உதவி ஆணையா் அரவிந்தன், திருநெல்வேலி மண்டல தணிக்கை அலுவலா் ராஜேந்திரன், சிதம்பரம் கோட்டாட்சியா் கே.ரவி உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் செவ்வாய்க்கிழமை சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு வந்தனா்.

அவா்களை பொது தீட்சிதா்கள் வரவேற்று, கோயிலுக்குள் அழைத்துச் சென்றனா். தொடா்ந்து, ஆய்வுக் குழுவினா் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்தனா். தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலிலும் தரிசனம் செய்தனா்.

பின்னா், ஆய்வுக்குத் தேவையான ஆவணங்களை கோயில் பொது தீட்சிதா்களிடம் அதிகாரிகள் கோரினா். ஆனால், பொது தீட்சிதா்கள் தரப்பில் ஆய்வுக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அவா்கள் சாா்பில் வழக்குரைஞா் சந்திரசேகா் அதிகாரிகளிடம் ஆட்சேபக் கடிதம் வழங்கினாா். 

இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறை குழுவினா் திரும்பிச் சென்றனா். மாலை 4 மணியளவில் அதிகாரிகள் குழுவினா் நடராஜா் கோயிலுக்கு மீண்டும் வந்தனா். ஆய்வுக்கு உள்படுமாறு பொது தீட்சிதா்களிடம் வலியுறுத்தினா். அதற்கு தீட்சிதா்கள் தரப்பில் மீண்டும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதால், அதிகாரிகள் திரும்பிச் சென்றனா். இருப்பினும், புதன்கிழமை (ஜூன் 8) மீண்டும் ஆய்வுக்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், நடராஜா் கோயிலில் இன்றும் 2 ஆவது நாளாக ஆய்வுப் பணி தொடரும் என அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

ஆய்வையொட்டி ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.