திமுக ஆட்சியை எதிர்த்து சென்னை சைதாப்பேட்டை பனங்கல் மாளிகையில் உள்ள ஊரக வளர்ச்சிதுறை இயக்குனர் அலுவலகம் முன்பு மக்கள் நலப்பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தங்களுக்கு பணி வழங்காமல் ஏற்கெனவே உறுதி அளித்த பணியையே வழங்க வலியுறுத்தி தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண் 66-ஐ திரும்பப் பெறக் கோரி மக்கள் நலப்பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.
கடுமையான வெயில் தாக்கத்தையும் பொருட்படுத்தாது சுமார் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் சங்கத் தலைவர் செல்லப்பாண்டியன், 'மக்கள் நலப் பணியாளர்கள் என்ற பெயரில் கருணாநிதி ஆட்சியில் எங்களுக்கு பணி வழங்கப்பட்டது. ஆனால், அதன்பின்னர் வந்த அதிமுக அரசில நாங்கள் வேலையிழந்தோம். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பழையபடியே வேலை உறுதி செய்யப்படும் என்று கூறினார். ஆனால், தற்போது ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. எங்களுக்கு மீண்டும் மக்கள் நலப்பணியாளர் என்ற பெயரில்தான் பணி வேண்டும். அதற்கு திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறினார்.