சேலம்: சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்திற்கு வருகை தந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் குறித்து விவாதிக்கும் வகையில், அதிமுக தலைமை நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த திங்கள்கிழமை கட்சி அலுவலகத்தில் நடந்தது.
அப்போது, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் யாரும் எதிர்பாராத வகையில் கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
இந்தநிலையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் அக்கட்சியில் புயல் வீச தொடங்கியுள்ளது. இதனால் கடந்த இரு நாள்களாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகிய இருவரின் வீடுகளில் அடுத்தடுத்து ஆலோசனை நடைபெற்றது.
சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவில ஒற்றை இலக்கு திமுகவை வீழ்த்து, ஒற்றைத் தலைமை எடப்பாடி கே.பழனிசாமி என்பதை வாசகமாக கொண்ட சுவரொட்டிகளை சேலம் புறநகர் மாவட்ட நிர்வாகி வழக்குரைஞர் மணிகண்டன் நகர பகுதி முழுவதும் ஒட்டியுள்ளார்.
இந்நிலையில், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை காலை சென்னையில் இருந்து சேலம் வருகை தந்தார். அவருக்கு வரும் வழியெங்கும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்தநிலையில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்திற்கு வருகை தந்த அதிமுக இணை ஒருங்கிணைபாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு, சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஒன்று திரண்டு வந்து வரவேற்றனர்.
குறிப்பாக, சேலம் மாவட்டத்திலுள்ள கெங்கவல்லி, வீரபாண்டி, தெற்கு, உள்ளிட்ட தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம், அதிமுக வார்டு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து அதிமுக தொண்டர்கள் என அனைத்து தரப்பினரும் எடப்பாடி கே.பழனிசாமி இல்லத்திற்கு வந்து குவிந்து வந்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், எடப்பாடி கே.பழனிசாமிக்கு தொண்டர்கள் அனைவரும் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வரவேற்றனர்.