சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் நிர்வாகி ஒருவர் காயமடைந்துள்ளார்.
வருகிற 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்த இறுதிக்கட்ட ஆலோசனை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொன்னையன், செம்மலை, மனோஜ் பாண்டியன், வளர்மதி, ஜெயக்குமார் என 11 பேர் கொண்ட குழு ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் தனது ஆதரவாளர்களுடன் தனியே ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்து இபிஎஸ் ஆதரவு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவுடன் ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார்.
இதனிடையே, தீர்மானக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளவந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக தலைமை அலுவலகம் வந்தபோது, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டுள்ளனர்.
இந்த நேரத்தில், ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இபிஎஸ் ஆதரவு ஜெயக்குமாருடன் வந்த அதிமுக நிர்வாகி பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் ரத்தக்காயம் பட்டார். 'நீ இபிஎஸ் ஆளா?' என்று கேட்டு தன்னை அடித்ததாக அவர் கூறியுள்ளார். இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.
இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமியும் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் உள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 'ஒற்றைத் தலைமை' குறித்து விவாதிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இதையடுத்து, அதிமுகவில் 'ஒற்றைத் தலைமை' விவகாரம் வலுத்து வருகிறது.
இதையும் படிக்க | 'ஒற்றைத் தலைமை சர்ச்சை': ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை!